dalitiyam

dimanche 23 août 2009

தலித் தகவல்

தமிழ் சமூகம் எந்த உலகத்தில் வாழ்ந்தாலும் சாதி ஒடுக்குமுறைகள் அல்லது சாதி ஏற்றத்தாழ்வு மோதல்கள் இடம் பெறுகிற போதெல்லாம் அது ஒரு குழு மோதல் என்ற வகையில் பிரச்சனைகள் குறுக்கப்பட்டு உடனேயே மூடி மறைக்கப்படுகிறது. அதற்கு மாறாக அதன் அடிப்படைத் தன்மைகளை ஆய்வு செய்து அதன் அடி நாதமாகிய சாதிய அமைப்பு வடிவத்தை அழித்தொழிக்க யாரும் முன்வருவதாக இல்லை. இந்த வகையில் அண்மையில் சுவிஸ் நாட்டிலும் கூட சாதி மோதல் நடைபெற்றதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. தமிழன் விமானம் ஏறும்போதே உடுப்பதற்கு உடையும் உண்ண உணவும் கொண்டு போகிறானோ இல்லையோ கலாச்சாரத்தின் பேராலும் மதத்தின் பேராலும் சாதியை மட்டும் தூக்கிச் சென்றுவிடுகின்றான். அதன்மூலம் சாதி ஒடுக்குமுறையை செய்ய முடியாவிட்டாலும் சாதியை இழிவு படுத்தும் சொற்கள் செயல்கள் தாராளமாகவே கடைப்பிடித்து வருகின்றனர்.
அவர்களது அதிகாரம் அல்லாத நாடுகளிலேயே சாதியை தக்கவைப்பதில் தீவிரம் காட்டும் தமிழன் சொந்தமண்ணில் எப்படி நடந்து கொள்வான் என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

வேலணை என்னும் கிராமத்தில் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு குறிச்சிவாரியாகவே வாழ்ந்து வருகின்றனர். எத்தனையோ யுத்தம் எத்தனையோ இடப் பெயர்வு நிகழ்ந்தாலும் சாதிகள் மட்டும் எந்தக் குறிச்சியும் மாறாமல் அப்படியே வாழ்ந்து வருகிறது. வேலணையில் தலித்துக்கள் வாழும் பகுதியில் உணவு சமைக்க ஒரு தண்ணீரும் குளிப்பதற்கு ஒரு இடமும் குடிக்கும் தண்ணீர் எடுக்க ஓர் இடமுமாக அலைக்கழிந்த வாழ்க்கையை நீண்ட காலமாகவே வாழ்ந்து வருகின்றனர். சமைக்கும் தண்ணீர் தமது வீட்டுக் கிணறுகளில் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். அதுவும் கடும் கோடைக்காலத்தில் கிணற்றுத் தண்ணீர் வற்றிவிடும். குளிப்பதற்கும் உடுப்புத் தோய்ப்பதற்கும் கடற்கரையை நோக்கி சென்று அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பொதுக்கிணத்தில் அத்தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள். குடிப்பதற்கான தண்ணீர் அதில் இருந்து முன்னூறு மீற்றர் தூரத்தில் நல்ல தண்ணீர் கிணறு என அழைக்கப்படும் (இதுவும் இச்சாதிக்கென ஒதுக்கப்பட்டது.) இடத்திற்கு சென்று பெற்றுக்கொள்கின்றனர்.

0 commentaires:

Enregistrer un commentaire

Abonnement Publier les commentaires [Atom]



<< Accueil